Saturday, January 1, 2011

மார்கழி கோலமும் மகளிர் நலனும்

-டி.கே. ஸ்ரீ நிவாஸன், சென்னை

                                                 திருமலையில் திருப்பாவை

             மாதங்களில் நான் மார்கழியாக  இருக்கிறேன் என்றான் கண்ணபிரான். அது பீடு உடைய (பெருமை உடைய) மாதம். அது நாளடைவில் மருவிப் பீடை மாதம் ஆயிற்று. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.
    விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
    மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்.
    ஆழி மழைக்கண்ணா என்ற திருப்பாவை - 4 -வது பாடலில் விஞ்ஞான அறிவியல் கருத்தும் காணலாம். மழை எப்படி பெய்கிறது என்பதை நாம் இன்று அறிவோம். சூரியனின் வெப்பத்தால் கடல் (நீரியல் சுழற்சி முறை)  நீர் நிலைகளிலுள்ள தண்ணீர் ஆவியாக மாறி மீண்டும் மழையாக பொழிவதை அன்றே ஆண்டாள் உரைத்துவிட்டாள்.
    திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. கிருஷ்ணவதார காலத்தில் ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை தானும் மேற்கொண்டாள்.
    முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் அவதாரங்களின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது..
    பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தில் பூசணி பூ வைத்து வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. அதிகாலையில் பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப் போகும்.
    பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது. வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியதற்கு காரணம் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷ்ண நிலையும் சமனடையும். சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவராசப்பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
    மார்கழி மாதத்தில் கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள் மார்கழியில் இல்லை.

    ஒவ்வொரு மாதத்திற்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் மார்கழிக்கு "கேசவன்" என்பது பெயர். கேசவன் என்பதற்குக் கூந்தல் என்றும், "கேசி" என்னும் அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்கு பெயர் என்றும் கூறுவர்.
    இந்த மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்தார். வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்  ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்தார். விப்ர நாராயணர் என்பது இவரது இயற்பெயர். இவரது பாடல்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றில் அடங்கியுள்ளன. தன் வாழ்க்கையை உணர்ந்து, நெறியை மாற்றிக்கொண்டு பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டார். நாமும் ஆத்ம விசாரம் செய்து நம் தவறை மாற்றிக்கொண்டு நல்வழியில் வாழ்க்கையை நடத்த வேண்டும். மாறுதலே உலகத்தில் நிரந்தரம்.
    மார்கழி மாத தொடக்கத்தில் தான் பாரதப் போர் தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடந்த இந்த போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்தது. விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்தது மார்கழி மாதமே. வைகுண்ட ஏகாதசி திருநாள் மார்கழி மாதத்தில் தான் வருகிறது.
    மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீ அனுமத் ஜெயந்தி. மார்கழி அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் வாயு மைந்தன் பிறந்தார். அறிவு, வலிமை, புகழ், தைரியம் இவற்றில் சிறந்தவரான அனுமன் தன் வாழ்க்கையை சேவைக்காக அற்பணித்தார்.
    மஹா விஷ்ணுவுக்கும் அனுமனுக்கும் உகந்த மார்கழி மாதத்தில் நாமும் இறைவனை வழிபட்டு சேவை மூலம் சகல நன்மைகளும் பெறுவோம்.

No comments:

Post a Comment