Saturday, January 1, 2011

அலகிலா விளையாட்டு


- மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியர்.

    "விட்டு விடு" என்பது தத்துவம்! வீடுமின் முற்றவும் என்பது சடகோபன் தண் தமிழ்; "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்பது தமிழ்மறை. தாய் தந்தையரின் விருப்பம் எதிரிடையானது. தயரதன் தனது வரங்களால் கட்டுண்டதால் கைகேயியின் வேண்டுகோளை மீறமுடியவில்லை. உண்மையில் ஸ்ரீ ராமன் வனம் புகுதலை அரசன் விரும்பவில்லை. அரசியோ (கைகேயி) ஸ்ரீ ராமன் நாட்டிலே இருப்பதையே விரும்பவில்லை; பரதனோ தாய் தந்தையர் மற்றும் பெரியோர்கள் கட்டளையையும் மீறி மரபின்படி ஒழுக எண்ணுகிறான். மக்களின் எண்ணத்தையும் மதிக்க எண்ணுகிறான். பரதன் ஸ்ரீராமனை மிகவும் வற்புறுத்தியபோதும் ஸ்ரீராமனின் உறுதி நம்மை வியக்க வைக்கிறது.
    லக்ஷ்மீ சந்த்ராத் அபேயாத்வா
    ஹிமவான்வா ஹிமம் த்யஜேத்
    அதியாத்ஸாகரோ வேபலாம்
    ந ப்ரதிக்ஞாம் அஹம் மிது:
    மதியை விட்டு ஒளி நீங்கினும் நீங்கும்
    (இமய) மலையை விட்டு பனி நீங்கினும் நீங்கும்
    கடலும் தன் கரை மீறினும் மீனும்
    தந்தைக்களித்த உரை கடவேன் யான்        (அ.கா. 112 - 28)




 
    இளவரசாவது யார்? என்ற ஓயாத இழுபறிப் போராட்டத்திற்கு அடியவனான பரதன் ஒரு முடிவு காண விரும்பினான். எம்பிரானுக்கு முடிசூட்டி அயோத்தி நகருக்கு அழைத்துச் செல்ல எண்ணினான் அடியனான பரதன்; முடிசூட மறுத்த மூத்தவனின் திருவடிகளைப் பெற்றிட எண்ணினான் பரதன்.
    "அண்ணா! இத்திருவடிநிலைகளில் ஏறிநின்று (அதிரோஹ) அருள்வீராக!" என்று இறைஞ்சி நின்றான்.   
    மனு, மந்தாதா என முன்னோர்கள் அரசாண்ட அரியணையிலே, முதன் முதலாக ஒரு புரட்சி செய்கிறான் பரதன்! முடியரசர்களாக இருந்தனர் முன்னோர்கள்; இன்று அயோத்தியின் கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே ஸ்ரீராமனின் திருவடிகளால் புனிதப்படுத்தப்பட்ட திருவடி இணையின் தரிசனம்! அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவை என்று சூடிய செய்தியைக் கம்பன் கொண்டாடுவான்.
    பரதன் சூளுரைக்கிறான்!
    அடிகளைப் பெற்ற அடியவனும்
    சடைமரவுரியில்தான் இருப்பேன்
    அண்ணல் இராமன் திரும்பும் வரை
    அடியனும் தவசிதான். புறநகரில்
    காயும் கனியுமே என் உணவு
    கண்ணா! என் கனவு நின் வரவு!
    ஏழு இரண்டாண்டில் வரவில்லை எனில்
    வீழும் என் உடல் தீயதனுள்!
    இராம இலக்குவர் கலங்கினரே
    பரத சத்ருக்னரும் கலங்கினரே
    பார்த்தவர் கண்கள் கடல் நீரே
    பரிதியும் பசுத்தனன் வெறுமையுடன்!

    இராமாயணம் ஒரு உணர்வுக்கடல்! அலைகளே பாசத்தின் பாத்திரங்கள்! நுரைகளே கவிதையின் கவினுறு வரிகள்! இராமனும் பரதனும் அப்பழுக்கற்ற சகோதரர்கள்: ஒருவன் தாயின் உரையை மீறாதவன்: மற்றொருவன் தர்மமே தாயினும் உயர்ந்ததென்பவன். வாய்மையா? மரபா? அற்புதமான போட்டி இங்கே! கம்பன் இந்த அலகிலா விளையாட்டின் முடிவை அழகாக அறிவிக்கிறான். வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவள்ளல் தயரதன் என்கிறான். வாய்மையை  இராமன் மூலமாகவும் மரபினை பரதன் மூலமாகவும் காப்பாற்றுகிறானோ?
                                            - தொடரும்.

No comments:

Post a Comment