Saturday, January 1, 2011

மேலத்திருமாளிகை ஸ்வாமிகள் காட்டிய ஆழ்வாரின் அழகு.

    அது ஒரு கார்த்திகை நாள். முற்பகல் 11.00 மணியிருக்கும். ஸ்வாமியின் திருமாளிகைக்கு அடியேன் ஏதோ ஒரு காரியமாகச் சென்றிருந்தேன்.
    ஸ்வாமிகள் அப்போது திருமாளிகையில் இருப்பாரோ என்று கொஞ்சம் சந்தேகமாகத்தானிருந்தது. அதற்கேற்றார்போல், அவர் சன்னிதிக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.
    ஸ்வாமியிடம் ஒரு பழக்கம் உண்டு.
    அவருக்கு முதன்மையான செயல் ஆழ்வார் கைங்கர்யம். கல்யாண ரங்கநாதர் கூட அதற்குப் பிறகுதான்.
    ஒரு பாகவதர் ஒருமுறை அடியேனிடம் ஸ்வாமிகளைப் பற்றி பின்வருமாறு கூறினார்.
    "ஸ்வாமிகள் ஆழ்வார் கைங்கர்யமோ, வேறு சன்னதி விசேஷமோ எதுவாயினும் அரைமணி நேரத்திற்கு முன்னால் வந்து காத்திருப்பார். அத்யாபக, வேதபாராயண கோஷ்டியையோ, ஆழ்வாரையோ காக்க வைத்து விட்டு பிறகு வருவதில்லை.
    ஆழ்வாருக்காகத்தான் நாம் காத்திருக்க வேண்டுமே தவிர, ஆழ்வாரை நமக்காக - நம் சௌகரியத்துக்காக காக்க வைக்கலாமா?" என்பாராம்.
    கார்த்திகை நாளல்லவா! திருமங்கையாழ்வார் திருமஞ்சன கோலத்தில் அபாரமாக சேவை சாதித்துக் கொண்டிருந்தார்.
    கோஷ்டி நடந்து கொண்டிருந்தது.
    அடியேன் தூரத்திலிருந்து சேவித்துக் கொண்டிருந்தேன்.
    மதியம் 1 மணி ஆயிற்று.
    பாலும், சந்தனமும், இளநீரும் என பலவித பரிமள கந்தங்களால் அழகு ஒளிர ஆழ்வார் காட்சி தந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளாக எடுத்து ஸ்வாமிகள் தந்து கொண்டிருந்தார்.
    தூப தீபம் ஆயிற்று.
    எல்லாம் முடிந்த பிறகு மங்கள கோஷத்தோடு கோஷ்டி புறப்பட்டது. அடியேனை அழைத்தார்.
    ஆழ்வாரின் பேரெழிலை சாதாரணமான நேரத்தில் தரிசிக்க முடியாது. இங்கே வந்து பார் என்றார். முன்னழகு சொக்க வைக்கும் என்று சொன்னால், பின்னழகு மயக்கம் போட வைக்கும்.

    ஆழ்வாரை பல கோணங்களில் சொல்லிச் சொல்லி ரசிக்க வைத்தார். ஸ்வாமியே ஒரு அபாரமான ரஸிகர். ராமாயணத்தில் நிபுணர். சில நேரங்களில் வான்மீகியின் சுலோகங்களில் வரும் சுவையான இயற்கை வர்ணனைகளை ரஸமாக எடுத்துரைப்பார். எனக்கு சுலோக அழகு ஒரு பக்கம் இருந்தாலும், அதனை சுவைத்துச் சுவைத்து சொல்லும் சுவாமியின் முகபாவமும், உணர்ச்சியோடு வரும் வார்த்தைகளும் அப்படி இப்படி நகராது கேட்க வைக்கும். "யாருக்கு என் சொல்லுகேன்" என்று திருக்கோட்டியூர் நம்பிகளின் நிலையில் இன்றி அடியேன் போன்றோருக்கும் ரசிக்கும்படி எடுத்துரைத்த விதம் அடியேன் நெஞ்சில் அகலாமலிருக்கிறது.

    ஒரு முறை ஸ்வாமி சொன்னார்.
    "ஆழ்வாரின் அழகை அணு அணுவாக ரசித்தவர் யார் தெரியுமா?"
    அடியேன் ஆசாரியரே சொல்லட்டும் என்று மௌனமாக இருந்தேன்.
    சொன்னார். "வேறு யாரால் சொல்ல முடியும் . நமது மாமுனிகளைத் தவிர......."
    ஆழ்வாரின் குணானுபவத்தை சௌந்தர்ய லாவண்ய அழகோடு இணைத்து ரசித்து மங்களாசாசனம் செய்ய அவரை விட்டால் யார்?
    ஸ்வாமி ரசனையோடு அந்தப்பாடலை வார்த்தை வார்த்தையாகச் சொல்லி வர்ணித்த அழகு.... என் நெஞ்சினுள் நீங்கா நினைவாய் நெகிழ வைத்துக் கொண்டேயிருக்கிறதே!
    அடுத்து முறை திருநகரி ஆழ்வார் திருமஞ்சனம் சேவிக்கும் போது இந்த மங்களாசாசனப்பாடல் உங்கள் கைகளில் இருக்கட்டும்.
    அணைத்தவேலும், தொழுதகையும், அழுந்திய
    திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
    குளிர்ந்த முகமும், பரந்த விழியும், பதிந்த நெற்றியும்,
    நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடிந்த காதும்,
    அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், சரிந்த
    கழுத்தும், அகன்ற மார்பும், திரண்ட தோளும், நெளித்த
    முதுகும், குவித்த இடையும், அல்லிக்கயிறும், அழுந்திய
    சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும்
    தனிமாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்,
    சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்
    தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக்காலும்
    குளிரவைத்த தருவடி மலரும், வாய்த்த
    மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
    வாடினேன் வாடி வாழ்வித்தருளிய,
    நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும்
    பரகாலன், மங்கைமன்னனான வடிவே.

No comments:

Post a Comment