Saturday, January 1, 2011

ஸ்ரீ கம்பன் கவி அற்புதம்

    - எம்பார்.கு.வெங்கடாச்சாரி, திருநகரி

    செவிகளால் பல கேட்டிலர் ஆயினும் தேவர்க்கு
    அவி கொள் நான்மறை அகபொருள் புறப்பொருள் அறிவார்
    கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்பொருள் காலால்
    புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார்.

    இப்பாசுரம் கம்ப நாட்டு ஆழ்வாரின் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப்படலத்தில் உள்ளது. இது ஒரு அற்புதம். கவித்திறம் எல்லை இல்லாதது. இதோ விளக்கம்: காலால் புவி கொள் நாயகற்கு - எம்பெருமான் மாவலியிடம் மூவடி நிலம் பெற்று உலகு அனைத்தையும் தன் அடிக்கீழ் கொண்டு வந்தமை எல்லோரும் அறிந்ததே. அப்படி எனில் இரணியன் வதைப்படலத்தில் வாமனன் எப்படி வர முடியும்? நரசிங்க அவதாரத்துக்கு பிறகே வாமனாவதாரம். பாடலை நன்கு ஆராய்ந்தால் உண்மை நிலை தெரிய வரும். "காலால் புவி கொள் நாயகற்கு" என்பதை காலால் என்பதை தனியாக அனுபவிக்கவும், புவி கொள் நாயகற்கு என்பதை தனியாக, அனுபவித்தும் பொருள் கொள்ளலாம். நரசிங்க அவதாரத்துக்கு முன்னும் நிலம் கொண்டான். பின்னும் நிலம் கொண்டான். முன் நிலம் கொண்டது ஸ்ரீ வராக அவதாரம். இதை ஸ்ரீ நம்மாழ்வார் "கோலவராகமொன்றாய் நிலம் கோட்டிடைகொண்ட என் தாய்" என்று பாடுகிறார்.

    ஆக, ஞானப்பிரான் உருவம் மனதினால் எண்ண முடியாத ஒன்று. ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று திருவிருத்தம் பேசும். இப்போது காலால் என்ற பதத்துக்கு இரண்டு பொருள் கொள்ளலாம். முதலில் திருமங்கை ஆழ்வார் அவன் திருவடியை மனதினால் கூட அளவிட முடியாத ஒன்று என்று "சிலம்பினிடை சிறுபரல் போல் பெரிய மேரு" என்று திருநாங்கூர் பாசுரத்தில் காட்டுகிறார். கால் சிலம்பு (தண்டை) அதன் உள் இருக்கும் "பரல்" பெரிய மேடு பர்வதம் என்றால் அத்தண்டை எவ்வளவு பெரியது? திருவடி எவ்வளவு பெரியது? ஆக அவன் திருவடியை மனதில் கொண்டு "காலால்" என்றார் கம்பநாட்டு ஆழ்வார்.  இரண்டாவதாக பல காலம் அலைந்து காலால் நடந்து பல பெரியவரிடம் "செவிகளால் பல கேட்டிலர்" ஆயினும் என்றும் பொருள் கொள்ளலாம். ஸ்ரீ வராக நாயனார் என்றே கௌசிக புராணம் கூறும்- "கற்றலில் கேட்டலே நன்று"செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று திருக்குறள் கூறும். ஞானம் அனுஷ்டானம் இரண்டும் பெறுவர் ஞானப்பிரான் திருவடி காண்பவர்; கவிகள் ஆகுவார் என்றும் மெய்ப்பொருள் காண்குவார் என்றும் கூறப்பட்டது. "கிடந்தானை கண்டு ஏறாதே பலகாலும் சந்தை இட்டு கற்கை" என்று ஸ்ரீ.உ.வே. காஞ்சி சுவாமி சொல்லுவர்; நினைத்தலும், வாழ்த்துதலும், வணங்குதலும், ஆகிய மூன்று முப்பது அறியார் ஆயினும்; இந்த ஒரு பாசுரம் வல்லார் எல்லாம் பெறுவர் என்பது நிச்சயம். முடிவாக "ஏனத்துருவாய் இம்மண்ணை இடந்தவன்" பூமி பிராட்டியை அடைந்தவன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருந்தி உள்ளமை தெளிவு.

No comments:

Post a Comment