Saturday, January 1, 2011

பெருநிலை வாழ்வு


    அச்சுதா என்றே அகத்தினுள் அழைத்தால்
        அளவிலா மகிழ்வெலாம் கூடும்;
    இச்சையாய் நெஞ்சுள் கேசவா என்றால்
        இனித்திடும் இன்பமும் சேரும்;
    மெச்சியே ராமா என்றதும் உந்தன்
        மெய்யதன் குறையெலாம் ஓடும்;
    பச்சைமா மலையாம் நாரணா எனும்முன்
        பதமுடன் அவனருள் கூடும்.
    ஹரி ஹரி நாம பக்தியில் உருகு
        அலைந்திடும் நெஞ்சமும் ஆறும்;
    உரிமையாய் கிருஷ்ண நாமமே பழகு
        உள்மன வேதனை தீரும்;
    கிரிதனில் வாழும் கோவிந்தன் நாமம்
        கேட்டினைத் துரத்திடும் தூரம்;
    விரிகுழல் கோபா லனவனின் நாமம்
        விரட்டிடும் கவலையை ஓரம்.
    பாற்கடல் மீது பள்ளி கொண்டவனைப்
        பக்தியால் வணங்கிடும் நேரம்
    கூற்றுவன் கூட ஓடியே மறைய
        கோதறு சாந்தியும் சேரும்;
    நேற்றைய நாளில் நேர்ந்ததை மறந்து
        நினைவினில் இன்று நீ பரமன்
    பேற்றினை வேண்டி பக்தியில் உருகு;
        பெருநிலை வாழ்வுனை நாடும்!

                - கே.பி.பத்மநாபன், கோவை.

No comments:

Post a Comment