Saturday, January 1, 2011

பெரும்பூதூர் கருனையங்கடல்

-ரங்கராஜன், மதுரை    

    இவ்வாறு நாட்கள் ஓடிக்கொண்டிருக்க, இராமாநுஜரின் தாய் காந்திமதி உடல்நலக்குறைவால் திருநாடு அலங்கரித்தார். மிக்க துயர் கொண்ட இராமாநுஜருக்குத் துணையாக மனைவி தஞ்சமாம்பாள் மட்டுமே இருந்துவந்தார். எப்போதும் போல் இராமாநுஜர் பாடசாலையில் பயின்றுவர, யாதவப்பிரகாசர் சில உபநிஷத் வாக்யங்களுக்கு அத்வைத நெறியில் விளக்கம் கொடுக்க, அதை இராமாநுஜர் மறுத்து ்விசிஷ்டாத்வ நெறியில்சு தக்க சான்றுகளுடன் நிலைநாட்ட, இதை ஏற்றுக்கொள்ளாத யாதவப்பிரகாசர் இராமானுஜரை நோக்கி "எல்லா மாணவர்களும் நான் சொல்வதை ஆமோதிக்கின்றனர். நீ மட்டும் மெத்தப்படித்தவன் போல் நடந்து கொள்கிறாய். எனவே நீ இனிமேல் பாடசாலைக்கு வரவேண்டாம் என்றார். இராமாநுஜரும் ஆசாரிய அபிமானத்தால் யாதவப்பிரகாசரின் பாதங்களில் விழுந்து வணங்கி "அடியேனை ஆசிர்வதித்து விடைகொடுங்கள். இனிமேல் அடியேன் தேவரீரின் ஆணைப்படியே பாடசாலைக்கு வரமாட்டேன்" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.
    பாடசாலையை விட்டு வெளியேறிய இராமானுஜர் மறுபடியும் தானே தன் வீட்டில் கல்வி பயின்று வந்தார். இவ்விடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அச்சமயத்தில் ஸ்ரீரங்கத்தை தலைமைபீடமாகக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்த்துவந்த பிரதம ஆசாரியரான ஆளவந்தார் என்ற யமுனைத்துறைவர் இருந்து வந்தார். இவருடைய பாட்டனாரான  ஸ்ரீநாதமுனிகள் காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர். இவர்தான் இடைக்காலத்திலே மறைந்திருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்களையும் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் சென்று தன் யோகாப்யாசத்தின் மூலம் மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற தலைப்புக் கொண்ட பதினொரு பாசுரங்களை பன்னிரண்டாயிரம் முறை நம்மாழ்வாரின் திருச்சிலை முன் சேவித்து நம்மாழ்வாரின் அருளினால் நமக்குப் பெற்றுத்தந்தவர். அத்துடன் ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்க்கவரும் பவிஷ்யதாசாரியார் (வருங்கால ஆசாரியர்) விக்ரகம் ஒன்றையும் நம்மாழ்வார் மூலம் பெற்று வந்தார். அந்த விக்ரகம் தன் பாட்டனாரிடமிருந்து பேரனான ஸ்ரீஆளவந்தாரிடம் இருந்துவர, அந்த விக்ரகம்போல் அமைப்புள்ள வருங்கால ஆசாரியரை எதிர்நோக்கியிருந்தார் ஸ்ரீஆளவந்தார். ஆனால் இதுவரை யார் அவர்? என்று காணமுடியவில்லை.
    சிலவருடங்களுக்கு முன்பு ஏற்கனவே இராமாநுஜரின் பிரபாவத்தைக் கேள்விப்பட்ட ஸ்ரீஆளவந்தார் இராமாநுஜரை ஸ்ரீரங்கமடத்திற்கு தனக்குப்பின்னால் தலைமை பீடாதிபதியாக கொண்டுவர எண்ணி அவரை அழைத்துவர ஸ்ரீரங்கத்திலிருந்து  காஞ்சிபுரம் சென்றிருந்தார். திருக்கச்சிநம்பிகள் மூலம் இன்னார்தான் இராமானுஜர் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆனால் அப்பொழுது இராமானுஜர் யாதவப்பிரகாசராகிய அத்வைதியிடம் கல்வி பயின்றுவந்ததால் அவரைத் தன்னுடன் அழைத்துவர முடியாத சூழ்நிலையில் தன் கண்குளிர அருள்செய்து "இக்குழந்தை இந்த அத்வைதியிடமிருந்து விலகி வரவேண்டும்" என்று காஞ்சி வரதராஜப்பெருமாளிடம் வேண்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பியிருந்தார்.
    இவ்வாறு நாட்கள் உருண்டோட, ஆளவந்தாரும் நோய்வாய்ப்பட்டார். இத்தருணத்தில் ஆளவந்தார் தன்னுடைய சீடர்களை அழைத்து தனக்குப்பின்னால் இராமாநுஜரை தலைமை பீடத்தில் அமர்த்தும் பொருட்டு அவரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார். அதன்படியே அவருடைய பிரதம சீடரான பெரிய நம்பிகள் காஞ்சிபுரம் சென்று ஆளவந்தாரின் விருப்பத்தை இராமாநுஜரிடம் தெரிவிக்க, இராமாநுஜரும் ஆளவந்தாரின் பிரபாவத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் மிக்க மகிழ்ச்சியோடு காஞ்சி வரதராஜரிடமும் திருக்கச்சிநம்பிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு ஆளவந்தாரை தரிசிக்க பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் சென்றார்.
    ஆனால் இராமாநுஜருடைய ஆசை நிறைவேறவில்லை. காரணம் நோய்முற்றிய நிலையிலிருந்த ஆளவந்தார் திருநாடலங்கரித்து விட்டார். இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து வடதிருக்காவிரியை அடைந்தபோது ஆளவந்தாருடைய சரம திருமேனியை (பூதஉடல்) காவிரிக்கரையில் பள்ளிப்படுத்துவதற்காகக் கொண்டுவந்த நிலையில்தான் தரிசிக்க முடிந்தது. இந்நிகழ்ச்சி இராமாநுஜரை மிகவும் வேதனைப்படுத்தியது. இராமாநுஜரும் அரங்கநாதனை தரிசிக்காமலேயே காஞ்சிபுரம் திரும்பினார். ஆளவந்தாருக்குப் பின் ஸ்ரீரங்கமடம் அவருடைய குமாரர் திருவரங்கப்பெருமாள் அரையரின் தலைமையில் இயங்கிவந்தது.
    காஞ்சிபுரம் திரும்பிய இராமாநுஜர் ஆளவந்தாரை இழந்த வருத்தத்திலேயே இருந்து வருங்கால் ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து அடியேனுக்கு மனதில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை தாங்கள் தேவப்பெருமாளிடம் (காஞ்சி வரதராஜர்) "கேட்டு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். நம்பிகளும் கேட்டுச் சொல்வதாக சொன்னார். இராமாநுஜர் மனத்தில் இருந்த ஆறு சந்தேகங்கள்.
    1) பரம்பொருள் யார்? 2)எது சித்தாந்தம்? 3)பகவானை அடைய சிறந்த வழி எது? 4)ஆத்மா பிரியும் தருவாயில் பகவானுடைய நினைப்பு வேண்டுமா? 5) இந்த தேகம் முடிவில் மோட்சம் கிட்டுமா? 6) அடியேன் யாரை ஆசாரியனாகப் பற்ற வேண்டும்?
    இராமானுஜர் தன்னுடைய சந்தேகங்களைச் சொல்லாமலேயே அவருடைய ஆறு சந்தேகங்களுக்கும் தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலம் விடைகள் கொடுத்தருளினார்.
    1) நானே (நாராயணனே) பரம்பொருள். 
  2)பேதமே சித்தாந்தம் (எல்லாம் ஒன்றல்ல) அசித்து (ஜடப்பொருள்) சித்து (ஜீவராசிகள்) ஈஸ்வரன் (சித்தையும் அசித்தையும் கொண்டு ஆள்பவன் பகவான்) இதுவே விசிஷ்டாத்வைத தத்துவம். 
   3) பகவானை அடைய சரணாகதி என்ற அவன் திருவடிகளைப் பற்றுதலே சிறந்த வழி. 
  4)சரணாகதன் பகவானை சரண் அடைந்த அப்பொழுதே அவனுடைய அனைத்து சேமங்களையும் பகவானே பார்த்துக் கொள்வதால் ஆத்மா பிரியும் போது பகவான் நினைப்பை  பகவானே உண்டாக்குவான். சரணாகதனுக்கு அந்தக் கவலை தேவையில்லை.
   5) சரணாகதனுக்கு தற்பொழுதுள்ள உடல் கழியும்போது (அதாவது இறந்தபின்) மோட்சம் கிட்டும். 
    6) மஹாபூர்ணர் என்ற பெரிய நம்பிகளை ஆசாரியனாக பற்றுக.
    சந்தேகங்களுக்கு விடைகிடைத்த மகிழ்ச்சியில் இராமாநுஜர் உடனே ஆசாரியரான  பெரியநம்பிகளை அடிபணிந்து தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவரைக்காண  மனைவி தஞ்சமாம்பாளுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். அதேசமயத்தில் ஸ்ரீரங்கத்திலும் ஆளவந்தாருடைய சீடர்கள் ஒன்றுகூடி ஆளவந்தாரின் விருப்பமான இராமாநுஜரை ஸ்ரீரங்கமட தலைமைப் பீடத்தில் அமர்த்தும் பொருட்டு இராமாநுஜரை அழைத்துவர மறுபடியும் பெரியநம்பிகளை நியமித்தனர். பெரியநம்பிகளும் தன் பாரியாளுடன் காஞ்சிபுரம் புறப்பட்டார். இவ்வாறு புறப்பட்ட இருவரும் மதுராந்தகத்தில் ஏரிகாத்த கோதண்டராமர் திருக்கோயிலில் சந்தித்துக் கொண்டனர். இராமானுஜர் பெரிய நம்பிகளின் பாதத்தில்  தண்டன் சமர்ப்பித்து (சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்குதல்) தன் ஆசாரியனை பெருமாளே அனுப்பிவைத்து விட்டார் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்து நிற்க, பெரிய நம்பிகளும் இராமாநுஜரை வாரி அணைத்துக் கொண்டு, தான் காணச்சென்றவர் எதிரிலே வந்து நிற்கிறாரே என்று நினைக்க, இருவரும் பெருமாளின் திருவருளை எண்ணி மகிழ்ந்தனர்.
    சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட இராமாநுஜர் பெரியநம்பிகளை நோக்கி, "காஞ்சி வரதராஜப்பெருமாள் அடியேனின் ஆசாரியனாக தேவரீரை நியமித்தருளினான். இதை திருக்கச்சிநம்பிகள் மூலம் அறிந்து கொண்டேன்". எனவே தேவரீர் அடியேனுக்கு பஞ்ச ஸமஸ்காரம் (ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒரு குருவை அண்டி ஐந்து செயல்களை எடுத்துக் கொள்ளும் சடங்கு பஞ்ச சமஸ்காரம் எனப்படும். அவையாவன, தோள்களில் 1) சங்கு சக்கரம் தரித்தல் 2) தாஸ்யநாமம் பெறுதல் 3) திருமண்காப்பு அணிதல் 4) மூன்று மந்த்ரங்களை பெற்றுக்கொள்ளுதல் 5) பெருமாளுக்கு திருவாராதனம் செய்தல்) செய்வித்தருள வேண்டும் என்று வேண்ட, பெரிய நம்பிகளும் ்குழந்தாய்! இந்த புண்ணிய வேள்வியை காஞ்சி வரதராஜப்பெருமாள் சன்னிதியில் வைத்துக் கொள்வோம்சு என்றார்.
    இதைக்கேட்ட இராமாநுஜர் பெரியநம்பிகளை அடிபணிந்து இவ்வாறு வேண்டினார். ்அடியேன் இனி ஒரு நொடிப் பொழுதும் தாமதிக்க முடியாது. அடியேன் மஹான் ஆளவந்தாரை தரிசிக்க எவ்வளவு மனக்கோட்டை கட்டினேன். ஆனால் விதியின் விளையாட்டால் முடியாமல் போய்விட்டது. மின்னின் நிலை இல மன்னுயிர் ஆக்கைகள் என்பதை தேவரீர் அறியாததா?சு என்று சொல்ல, இதைக் கேட்ட பெரியநம்பிகள் இராமாநுஜரின் ஆர்வத்தை அறிந்து அக்கோயில் வளாகத்திலுள்ள மகிழமரத்தின் கீழ் அமர்ந்து திவ்யமான முறைப்படி பஞ்சஸம்ஸ்காரம் செய்துவைத்தார். அவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்த நாள் ஒரு ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமிதிதி அன்று. அத்திருநாளே இன்றும் மதுராந்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் "எம்பெருமானார் பஞ்ச ஸம்ஸ்கார வைபவமாகக்" கொண்டாடப்படுகிறது.
    அனைவரும் மதுராந்தகத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் அடைந்தனர். அங்கு இராமாநுஜரின் பாரியாள் தஞ்சமாம்பாளுக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தார் பெரியநம்பிகள். இராமாநுஜரும் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை பெரியநம்பிகளின் குடும்பத்திற்கு ஒதுக்கி அவர்களை அங்கு குடியமர்த்தினார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்தார். பெரியநம்பிகளுக்கு பணிவிடை செய்து கொண்டே அவரிடம் திவ்யப்பிரபந்தங்களின் விரிவான பொருளை கற்று வந்தார்.
                                     - தொடரும்.

No comments:

Post a Comment