Saturday, January 1, 2011

உத்தரமேரூர்


 - ஸ்ரீ கூர்மநாதகவிதாஸர், பெருமாள்கோயில்

    உத்தரமேரூர் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி நகரங்களிலிருந்து ஒரு மணி நேர சாலைப்பயணத்தில் அடையக்கூடிய அழகிய, பழமையான, சரித்திரச் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பெற்ற அபிமான ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இன்று ஓரளவு வசதிகள் இருக்கும் சிறிய நகரமாகவும் நீர்வளம் மிகுந்த விவசாய மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது.
    நகரத்தின் மையப்பகுதியில் ஸ்ரீ வைகுந்தப்பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஈடுபட்டுள்ள எந்த ஆராய்ச்சியாளரும் உத்தரமேரூர் கல்வெட்டுக்களை அறியாமலிருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளை உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் விளக்குகின்றன. தொல்பொருள் இலாக்காவினரின் பொறுப்பில்  இக்கோயில் உள்ளது.
    திருத்தலத்தின் புகழ்பெற்ற தலைமைத் தெய்வமான ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் ஆனந்தவல்லித்தாயாருடனும் ஸ்ரீ தேவி பூதேவியுடனும் எழுந்தருளியிருக்கிறார். அஷ்டாங்க விமானமுடைய மிகச்சில திருக்கோயில்களுள் இவருடைய திருக்கோயிலும் ஒன்றாகும். (பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோயில்) திருக்கோட்டியூர், மதுரை கூடலழகர் கோயில்கள் ஆகியவையும் அஷ்டாங்க விமானங்களுடையவையாகும்). இக்கோயில் நவநாராயண திருக்கோயிலாகும்.
    கீழ்தளத்தில் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள், அச்சுத வரதராஜப்பெருமாள், அநிருத்த வரதராஜப்பெருமாள், கல்யாண வரதராஜப்பெருமாள் சந்நிதிகள் உள்ளன.
    முதல் தளத்தில் வைகுண்ட வரதராஜப்பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணன், யோக நரசிம்மர், லக்ஷ்மி வராகர் எழுந்தருளியிருக்கின்றனர்.
    இரண்டாம் தளத்தில் அனந்த பத்மநாபப் பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்.
    "வரத வரதீ  என்னும் திருநாமம் கேட்டுக் கொண்டேயிருப்பதால் திருஅத்தியூர் எனும் காஞ்சிபுரியையும் ஸ்ரீ கிருஷ்ணனால் மதுராபுரியையும் யோகநரசிம்மரால் சோழஸிம்ஹபுரமாகிய திருக்கடிகை (சோளிங்கர்) தலத்தையும், லக்ஷ்மி வராஹரால் திருவிடந்தையையும், அனந்த பத்மநாபனால் திருவனந்தபுரத்தையும் இக்கோயில் நினைவூட்டுகிறது. இவ்வகையில் அஷ்டாங்க விமானமுடைய பஞ்சகே்ஷத்ர அபிமானஸ்தலம் என்று இவ்வாலயம் கொண்டாடப்பெறுகிறது.

    ஆழ்வார்கள், ஆண்டாள், பூர்வாசார்யர்கள் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்கள். இராமாநுஜரின் வழிவந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு வேத, வேதாந்த, உபநிஷத, ஸ்ம்ருதி ஞானங்கள் இல்லாவிடினும் பரவாயில்லை. திருவாய்மொழியிலும் ஸ்ரீ மத் ராமாயணத்திலும் ஈடுபாடும் பக்தியும் இருந்தால் போதுமானது.
    விஜயநகர சங்கமகுல மன்னரான மல்லிகார்ஜூனன் காலத்தில் அவனுடைய குலத்தவர் தாதாசார்யர்களை ராஜகுருவாக ஏற்றுக்கொண்டனர். "ஐயாவய்யங்கார்" எனும் தாதாசார்யர் இரண்டாம் ஸ்ரீரங்கனுடைய காலத்தில் தொண்டை மண்டல திருத்தலங்களில் ஏராளமான கைங்கர்யங்களைச் செய்வித்தார். இம்மிடி குமார திருமலை தாதாசார்யர் தென்னேரியில் மிகப்பெரிய ஏரியை வெட்டுவித்தார். தாதசமுத்திரம் (ஐயங்கார்குளம்) எனும் ஏரியைக் காஞ்சிபுரத்தின அருகில் வெட்டுவித்தார். இவையெல்லாம் இன்றைக்கு ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்குமுன் நடந்தன எனலாம் (கலி 4683/ அஈ. 1582). இவருடைய வம்சத்தில் வந்தவர்தாம் கோடிகன்யாதானம் தாதாசார்யர். இவர் விஜயநகர மூன்றாம் வேங்கடவனின் ராஜகுருவாக விளங்கினார் (கலி 4731 - 4743 /அஈ 1630 - 1642). திருமலை, திருஅத்தியூர், திருமாலிருஞ்சோலை திருக்கோயில் விமானங்களுக்குத் தங்கம் வேய்ந்தார். இவர் முன்னோர்களின் வழியில் தொண்டைமண்டலத்தின் நீர்ப்பாசன ஏரிகளைச் சீர்ப்படுத்தினார். தொண்டனூரில் ஏரியை வெட்டுவித்த ஸ்ரீ ராமானுஜரே இவ்விஷயத்தில் தாதாசார்யர்களுக்கு முன்னோடியாவார். நம் முன்னோர்கள் ஆலயங்களை ஆன்மிக மையங்களாக மட்டுமல்லாமல் சமுதாய நல மையங்களாவும் நிர்வகித்து வந்தார்கள். வீரநாராயணபுரம் ஏரி எனும் வீராணம் ஏரி ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு முக்கியமான தீர்த்தமாகும்.
    வீரநாராயணபுரம் ஏரியின் எழுபத்துநான்கு மதகுகளை ஸ்ரீ ராமாநுஜர் நியமித்த எழுபத்து நான்கு ஆசார்யர்களாகவே பெரியோர்கள் உருவகம் செய்வார்கள். மதுராந்தகம், வீராணம் ஏரிகளைப் போலவே உத்தரமேரூர் ஏரியும் மிகப்பெரியதும் புகழ்பெற்றதுமாகும்.
    இக்கோயில் பிரார்த்தனை ஸ்தலமாகும். ஸ்ரீ கல்யாண வரதரிடம் கல்யாண பிரார்த்தனைகளும், ஸ்ரீ அச்சுத வரதரிடம் உடல்நலம் காக்கும் பிரார்த்தனைகளும் ஸ்ரீ லக்ஷ்மி வராஹரிடம் வழக்குகளில் வெற்றிபெற வேண்டும் பிரார்த்தனைகளும் செய்து கொள்ளப்படுகின்றன.
    அண்மையில் மிகவும் முயன்று அன்பர்கள் கட்டியிருக்கும் இக்கோயிலின் இராஜகோபுரம் நீண்டு உயர்ந்து மங்களகிரி லக்ஷ்மி நரசிம்மர் கோயிலின் இராஜகோபுரத்தை நினைவில் கொண்டு வருகிறது. இரட்டைத்தளி ஈஸ்வரர் கோயில் எனும் சிவாலயமும் இவ்வூரில் இருக்கும் பழமையான ஆலயமாகும்.
    திருக்குடந்தை, காஞ்சிபுரம் போலவே உத்தரமேரூரிலும் ஸ்ரீ தாததேசிகன் (தாதாசாரியர்) ஸ்வாமிக்கு விக்கிரகப் பிரதிஷ்டையும் வைபவங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாதாசார்யர் பாடிய ஸ்ரீ ஹனுமத் ஸ்தவம் எனும் ஸ்தோத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இவர் எழுப்பிய சஞ்சீவிராயர் கோயில் ஐயங்கார் குளம் ஊரில் இன்றும்  உள்ளது. தாதாசார்யர் ஆஞ்சநேயரை மானஸ ஸாக்ஷாத்காரத்தில் சேவித்து இந்த ஸ்தவத்தைப் பாடினார். சஞ்சீவிராயரை சேவித்து விட்டும் உத்தரமேரூர் வந்து இத்திருக்கோயிலில் நவநாராயணர்களைச் சேவிக்கலாம்.

No comments:

Post a Comment