Saturday, January 1, 2011

ஸ்ரீ ராம அனு யாத்திரை


12.9.2010 - ஞாயிறு

    இரயில் பயணத்தில் இன்று அதிகாலையில் விழித்தெழுந்து காலைக்கடன்களை முடித்து நீராடி, திருவாராதனப் பெருமாளுக்கு திருமஞ்சனம், திருவாராதனம் செய்து மகிழ்ந்தோம். இரயிலிலேயே அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பிரசாதப்பட்டோம். காலை சுமார் 9.20 மணியளவில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடைந்தோம். உற்சாசமாக இரயில் நிலையத்துக்கு வெளியே வந்தோம்.
    இரயில் நிலையத்திற்கு வெளியே குளிர்சாதன வசதிகள் கொண்ட 16 பேருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் ஆகியவை அவற்றின் எண்களோடும், பெயர்களோடு ம் அணிவகுத்து நின்றன. ஏற்பாடுகளைக் கண்டு வியந்தோம்.
    1. சீதாராமன், 2.பரதன், 3.லட்சுமணன், 4.சத்ருக்கணன், 5.தசரதன், 6.கௌசல்யை, 7.சுமத்ரை, 8.வசிஷ்டர் 9. விஸ்வாமித்திரர் 10. குகன் 11. அனுமன் 12.சுக்ரீவன் 13. ஜடாயு 14.விபீஷணன்
    இவை யாத்ரீகர்களுக்கான பேருந்துகளும் அவற்றின் எண்களும்                  ஆகும்.
    15. கைகேயி: இது கூடுதலாகத் தேவைக்கு (குணீச்ணூஞு) வைக்கப்பட்டிருந்த பேருந்தாகும்.
    16. சுசேனா: இது மருத்துவக் குழுவுடன் கூடிய முதலுதவி வாகனம் (வேன்)
    17. சபரி:  இது தளிகைப் பணிக்கான பேருந்து.
    பெட்டிகளை லக்கேஜ் பாக்ஸில் வைத்து விட்டு அவரவர்கள் அவரவர்கள் பேருந்தில், அவரவர்கள் இருக்கையில் எவ்விதக் குழப்பமும், இடையூறும் இன்றி மகிழ்வுடன் விரைந்து சென்று அமர்ந்தோம். எல்லாப் பேருந்துகளிலும் ஒலி வாங்கி (மைக்), ஒலி பெருக்கி (ஸ்பீக்கர்)  ஸ்ரீ.வேளுக்குடி ஸ்வாமியின் அனுயாத்ரை மற்றும் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் பற்றிய உபந்யாஸங்களின் குறுந்தகடுகள் தயாராக இருந்தன.
    ஒரு பேருந்துக்கு இரண்டு தன்னார்வத்தொண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள். யாத்ரீகர்களுடன் வித்வான்கள், வைதீகப்பெருமக்கள், அர்ச்சகர்கள், சான்றோர்கள் எனப்பல குழுவினர்கள் இந்த யாத்ரையில் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீ.வேளுக்குடி ஸ்வாமியின் இந்த யாத்ரையில் திருப்புல்லாணி  ஸ்ரீ .உ.வே. ஸூந்தர்ராஜ  ஐயங்கார் ஸ்வாமி, கபிஸ்தலம் ஸ்ரீ.உ.வே. ஸ்ரீநிவாசாச்சாரியர் ஸ்வாமி, திருத்தென் திருப்பேரை ஸ்ரீ.உ.வே. அரவிந்தலோசனன் ஸ்வாமி, திருக்கடிகை ஸ்ரீ.உ.வே. தொட்டாச்சார்யர் ஸ்வாமி, திருவெள்ளறை  ஸ்ரீ.உ.வே. விஷ்ணுசித்தன் ஸ்வாமி, திருக்குடந்தை அர்ச்சகர் ஸ்ரீ.உ.வே. சௌந்தர பட்டர் ஸ்வாமி, திருவழுந்தூர் அர்ச்சகர் ஸ்வாமி உள்ளிட்ட பல சான்றோர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அனுக்கிரகித்தார்கள்.
    இந்த வித்வான்கள் அவ்வப்போது பல பேருந்துகளுக்கு வந்து உபந்யாஸங்களைச் செய்தனர். யாத்ரீகர்களின் பல சந்தேகங்களுக்கு விடையளித்து நிறைவளித்தனர்.
    இன்று காலை இரயிலிலிருந்து இறங்கி சுமார் பதினைந்து நிமிடங்களில் சுமார் 600 பேர் அடங்கிய பேருந்துப் பயணம் துவங்கியது என்றால் இந்தப் பயணத்திட்டத்தைச் செயலாக்கியவரின் நிர்வாகத்திறனை என்னென்பது?
    குளிர்சாதனப் பேருந்தில், குளுமையான மனதோடும், எண்ணங்களோடும் உத்திரப்பிரதேசம் கான்பூர் இரயில் சந்திப்பிலிருந்து கல்யாண்பூர் வழியாக கானோஜ் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ தொலைவில் கங்கைக் கரையில் அமைந்துள்ள பிட்டூரை சேவிக்கும் பயணம் துவங்கியது.
    எங்களது பேருந்து எண் 4. பேருந்துப் பெயர் சத்ருக்கணன். பேருந்துப் பயணம் துவங்கிய கொஞ்ச நேரத்தில் பயணிகள் அனைவருமே தம்மை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக தாமே தம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுக்குள்ளான  இறுக்கத்தைத் தவிர்த்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டோம். பஜனைகள், பாடல்கள் எனப் பேருந்துப் பயணம் கலகலப்பாகியது. பயணத்தின்போது ஆங்காங்கே சத்சங்கங்களும் எங்களுக்குள் நடைபெற்றன. பலரிடமிருந்து பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
    செல்லும் வழியில் "தமஸாநதி" யின் தரிசனம் கிட்டியது.

தமஸா நதி - பிட்டூர்
 
 
    இந்த நதி சோனா நதி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உருவானதே இந்த நதியின் கரையில் தான். ஸ்ரீ வால்மீகி பகவான் தமது சீடர் பரத்வாஜரோடு  இந்த நதியில் நீராடிய போது வேடன் ஒருவன் க்ரௌஞ்ச பறவைகள் இரண்டில் ஒன்றை  கொல்வதைக் கண்டு சபித்து மாநிஷாத என்று தொடங்கும் ச்லோகம் ஒன்றினை உரைத்தார். அதுவே ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உருவாகக் கருவானது. பிட்டூர் வால்மீகி ஆச்ரமம் சென்ற பின் இது பற்றிய விபரங்களைக் காண்போம். பேருந்துலிருந்து கொண்டே தமஸா நதியைத் தரிசித்து மகிழ்ந்து நண்பகல் பிட்டூரில் கங்கை நதியின் கரையை அடைந்தோம்.

கங்கை நதி - பிட்டூர் 
 


  
    எம்பெருமான் உலகளந்தபோது சத்யலோகம் சென்ற அவரது திருவடியை நான்முகன்தனது கமண்டல தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்ய, எம்பெருமானின் திருவடியைத் தீண்டும் பேறு பெற்ற அந்தத் தீர்த்தமே கங்கையாகக்  பெருகிச் சிவபெருமானின் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டு பகீரதனின் கடுந்தவத்திற்காக இந்தப் பாரதமாம் புண்ணிய பூமியிலே இமயத்தில் இறங்கி யுகயுகமாக நமது தேசத்தை வளப்படுத்திக் கொண்டும் புனிதப்படுத்திக் கொண்டும் உள்ளது.
    அனைவரும் பெருமகிழ்வுடனும் குதூகலத்துடனும் கங்கையில் நீராடிக் களித்தோம். திருவராதனப் பெருமாளுக்கு திருமஞ்சனம் கண்டருளப் பண்ணித் திருவாராதனம் செய்து மகிழ்ந்தோம். இந்தப் புனித யாத்ரையில் பல புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களிலும் சேதுவிலும் நீராடும் பாக்யமும் அங்கே அடியேனின் திருவாராதனப் பெருமாளுக்குத் திருமஞ்சனமும் திருவாராதனையும் செய்விக்கும் பாக்யமும் கிடைத்தது பெறும் பேறே!
ப்ரஹ்மா ஆச்ரமம் - பிட்டூர்
    கங்கைநதியின் நடுவே "ப்ரஹ்மா ஆச்ரமம்" எனும் பிரம்ம பாதம் உள்ளது. நதியின் பிரவாகத்துக்குள் இருந்தபடியால் தரிசிக்க இயலவில்லை. கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி யே கோஷங்களுடன் வழிபட்டு வந்தோம்.
    நண்பகல் 1.00 மணியளவில் புறப்பட்டு பிட்டூர் "ராம்ஜானகி இண்டர் காலேஜ்"என்ற கல்லூரி ஆச்ரமம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து "வால்மீகி ஆச்ரமம்" வந்தடைந்தோம்.                    
                                                                                               - தொடரும்.

No comments:

Post a Comment