Saturday, January 1, 2011

வம்மின் புலவீர்!

- தமிழ்மாமணி. பாவலர் சித்தன், புதுச்சேரி

    ஆழ்வார்களில் முதன்மையானவர் சுவாமி நம்மாழ்வார்! ஆழ்வாரை வேதம் தமிழ் செய்த மெய்யன் - எழில் குருகை நாதன் என்றார் மணவாளமாமுனிகள். மேலும் ஆழ்வார் என்றாலே சிறப்பாக நம்மாழ்வாரையே குறிக்கும். நம் - ஆழ்வார் என்று இவரை நாம் அனைவருமே உரிமை கொண்டாடுகிறோம்.
    "நம்பெருமாள், நம்மாழ்வார், நஞ்சீயர், நம்பிள்ளை" ஆகிய நால்வருக்குமே "நம்" என்ற சிறப்புண்டு.
        "உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் ? உண்டோ திருவாய்
            மொழிக் கொப்பு?" என்பது உபதேசரத்தினமாலை


    நான் பாவேந்தர் பாரதிதாசனாரிடம் தமிழ் பயின்று கொண்டிருந்த போது ஒரு நாள் அவர் திருவாய்மொழியைப் படித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். இவர் நாத்திகராயிற்றே! இதைப் படிக்கின்றாரே - என்று வியந்து, "ஐயா! நீங்கள் ஏன் இதைப்படிக்கின்றீர்கள்?" என்றேன். அதற்கவர், "இதை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். இது வளமான தமிழ் ; தமிழ் அழகுகள் இதில் கொட்டிக் கிடக்கின்றன" - என்றார்.
    கவிஞர் என்னைப் பார்த்து "முதற் பதிகத்தில் ஒரு பாடலைச்சொல்"என்றார்,நான்.
        "மனனக மலமற மலர்மிசை எழுதரும்"
என்று தொடங்கும் பாசுரத்தைச்சொன்னேன்.
    இந்தப் பாட்டின் சிறப்பென்ன? என்றார். "எனக்குத் தெரியாதுங்க" - என்றேன்.
    "பொருள், சந்தம் முதலியவைகளை அறிந்து படிக்க வேண்டும்" என்றார். இந்தப் பதிகத்தில் நெட்டெழுத்தே வராமல் பாடியுள்ளார் பார்! பாட்டின் முடிவில் "ஏசு ஈற்றெழுத்து" அது பிரிநிலை ஏகாரம் என்றார்.
    "ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் தான் நாம் சந்தங்களை - வண்ணங்களைக் காணலாம். இது சந்தப் பாடல்!" என்றார்.

    ஒருநாள், புலவர் சிலர் ஆழ்வாரைக் காண வந்தனர். அவர்களை ்வம்மின் புலவீர்சு என்றழைத்தார் ஆழ்வார்.
    "நாங்கள் ஒரு வள்ளலைப் பாடிப் பொருள் பெறச் செல்கிறோம்" என்றனர் புலவர்கள்.
    "தன் செல்வத்தை வளனாக மதிக்கும் இம்மானிடத்தைக் கவி பாடி என்ன பயன்" ?
    புலவீர்! மிக நல்ல வான்கவி கொண்டு நிலையற்ற மனிதரைப் பாடி அவரிடம் பெறும் பொருள் உமக்கு எத்தனை நாளைக்குப் போதும்?
    "செல்வம் ஒரு குப்பை; அதைப் பெறுவதற்காக உம் வாய்மையை இழக்கின்றீரே!" - என்றார் ஆழ்வார்.
    புலவர்கள் - "சுவாமி ; படித்துள்ள நாங்கள் யாரையாவது பாடவேண்டுமே" என்றனர். அவர்கட்கு ஆழ்வார் - "உலகில் வள்ளல் ஒருவனே; அவன் என் வள்ளல் மணிவண்ணன். அவனைப் பாட வாருங்கள் : இவ்வுலகில் செல்வர் இப்போதில்லை நோக்கினோம்" - என்றார்.
    புலவர்கள்! "சுவாமி; எங்கள் வாழ்வு நடைபெற வேண்டுமே" என்றனர். அதற்கு விடையாக ஆழ்வார், நீங்கள் உங்கள் உடலை வருத்தி உழைத்துப் பொருள் தேடி வாழ முயலுங்கள்.
        "நும் மெய் வருத்திக் கைசெய்து உய்மின்"
    அதுவே நல்வாழ்வு,அதைவிட்டு,
       "மாரியனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள்"
    என்று அவனிடம் இல்லாததைக் கூறி.
        "பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசி"
    உழல்கின்றீர்! - என்றார்.

        போலிப் புரவலனுக்கு ஆழ்வார் தந்த பெயர் பற்றை. (பற்றை = அற்ப வஸ்து; முளைத்தெழுந்து தீய்ந்துபோம் சிறு தூறு (தூறு = சிறு செடி).
    போலிப் புரவலனை ஆழ்வார் மனிதனாகவே மதிக்கவில்லை. ்புலவர்களே! நான் மானிடம் பாடவந்த கவி அல்லேன். நீங்களும் என்வழிக்கு வாருங்கள்சு - என்று கூறாமல் கூறுகிறார்.
    பாவேந்தர் சொன்னார் :-
    பாரதியாருக்கு மிகவும் பிடித்த பதிகம் இது. நம்மாழ்வாரைச்
    "சுயமரியாதையுடன் புலவர் வாழ வழிசொன்ன வள்ளல்" என்று புகழ்ந்துள்ளார் - என்று.
இக்கட்டுரை : - திருவாய் மொழி : சொன்னால் விரோதமிது (3-9-1)
        என்ற பதிகம் கூறும் செய்திகளின் சுருக்கம்.
   

No comments:

Post a Comment