Saturday, January 1, 2011

ஆசார்ய அநுக்கிரகம்

- ஸ்ரீ முஷ்ணம் கு. பட்டப்பா விஜயராகவாச்சாரி, சென்னை 

               ஞானம் அனுஷ்டானம் நன்றாக உடையவரும் குறிப்பு அறிந்து செயலாற்றும் வல்லமை படைத்தவரும் அன்பும், பண்பும் கொண்டவர் யாரோ அவரே ஆசார்யன் (குரு) எனப்படுவர். பண்டைய காலத்தில் அரண்யம் (காடு) என்று சொல்வர். அங்கு தனியிடத்தில் குடில் அமைத்து ஆசிரியர் வாழ்வர். அவருக்கு பணிவிடை செய்து மாணவன் கல்வி பயில்வான். கல்வியில் மனம் ஈடுபாட்டுடன் அமையும். கல்வியும் பதினான்கு ஆண்டுகளில் முடியும். ஆசிரியருக்கு கற்கும் கால பணிவிடைகளே குரு தட்சணை (சம்பளம்) யாக அமையும்.     அயோத்தியை ரகு என்ற அரசன் நீதி வழுவாது ஆண்டு வந்தான். அப்போது கல்விச்சாலைகளின் சிறப்பு அதிகம். அப்படிப்பட்ட கல்விச்சாலையில் "வரதந்துசு என்ற பேராற்றல் பெற்ற ஆசிரியர் (மகரிஷி) பாடம் சொல்லிக் கொடுத்தார். பல மாணவர்கள் படித்தனர். கல்விக்காலம் முடிந்து ஊருக்குச் செல்ல மாணவர்கள் தயாராக இருந்த நிலையில் "கௌத்ஸர்சு என்ற ரிஷிகுமாரன் ஆசிரியரை வணங்கி தங்களுக்கு ஏதாவது குருதட்சணை கொடுக்காமல் செல்லமாட்டேன் என்று பிடிவாதமாகக் கூற, ஆசிரியரும் பலமுறை சொல்லியும் கேளாத மாணவனை, "நீ கற்ற கல்விக்கு ஒரு கல்விக்கு ஒரு கோடி பொன் வீதம் கொடு" என்றார்.     மாணவன் திகைத்தான். ஆசிரியர் கேட்டதைக் கொடுக்க  என்ன செய்யலாம்? என  சிந்தித்தான். அவர் அனுக்கிரஹம் கட்டாயம் கிடைக்கும் என்று நம்பினான். பசி தாகம் மறந்தான். கால் போன வழி நடந்தான். பலநாள் நடந்து அயோத்தி மாநகர் எல்லையை அடைந்தான்.     பலர் செல்வங்களோடு ஆனந்தமாக வாழ்ந்த கொண்டிருந்தனர். அதைப் பார்த்து ஆனந்தப்பட்டாலும் முகம் வாடியிருந்தது. அதைக்கண்டவர்கள், "சிறுவனே! ஏன் முகம் வாடி இருக்கிறாய்" என்று கேட்டனர். தன்னிலையை கூறினான். "கவலைப்படாதே" ரகுமஹாராஜா ஆனந்தமாக அயோத்தியில் "விஸ்வஜித்" என்ற யாகத்தை முறைப்படி செய்து முடித்து அனைவருக்கும் தானதர்மங்கள் செய்கிறான். நீயும் போனால் உன் கவலை தீரும் என்றனர். அவன் அங்கு சென்றான்.     அந்தோ பரிதாபம், அரசன் செல்வம் அனைத்தையும் செலவிட்டு விட்டான். பொன் வட்டிலால் வந்தவர்களின் பாதபூஜை செய்பவன் மண்பாத்திரம் கொண்டு பாதபூஜை செய்யலானான். பார்த்த சிறுவன் வாய் மூடி மௌனமானான். அரசனோ அவனை விடவில்லை. வந்த காரணத்தை வினவினான். மாணவன் கூறலானான். அரசே     "நிர்பந்த சஞ்சாத ருஷார்த்தகார்ஸ்யம்     அசிந்தயித்வாகுரு ணாஹமுக்த:     வித்தய்யவித்யா பரிசங்க்யயாமே     கோடீஸ் சதஸ்ரம்தசசாஹரேதி"     என்றான். அதாவது என்னால் நிர்பந்தப்படுத்தப்பட்ட ஆசிரியர் எனக்கு கற்ற கல்வி 14-க்கும் 14 கோடி பொன் கேட்க, குருவிற்கு கொடுக்க அதனை யாசிக்க வந்தேன் என்றான்.         மகரிஷி குமாரனிடம், "இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்? வேண்டிய திரவ்யங்களை கொடுக்கிறேன்" என்று கூறிவிட்டு குபேரன் வாழிடம் நோக்கி போர்முரசு கொட்டச் செய்ய அதை அறிந்த குபேரன் ரகுவின் பொக்கிஷத்தை (பணமழையாக) "பவுன் மழையாக" பொழிந்து நிரப்பிவிட அனைத்தையும் கௌத்ஸரை பெற்றுக் கொள்ள வேண்டினான். அவரும் குருவின் (ஆசார்யனின்) அனுக்கிரஹமாக 14 கோடி பவுன் மட்டும் பெற்று குரு தட்சணை கொடுத்து மனநிறைவு பெற்றான்.     அவர் பெற்றது போல்  சாந்தீபினி கண்ணன் மூலம் குரு காணிக்கையாக தன்னுடைய மாண்டுபோன புத்திரர்களையும் காலவர் மூலமும் 600 இச்சை காதுள்ளி குதிரைகளையும் குருதட்சணையாக பெற்றனர். ஸ்வாமி ராமாநுஜரோ பரமாசார்யர் ஆளவந்தார் அனுக்கிரஹம் பெற்று பல செயற்கரிய செயல்களை செய்து முடித்தார். ஆகவே ஆசார்யன் சிஷ்டாசாரத்துடன் அனுக்கிரஹித்தால் சிஷ்யனும் ஆசார்யனே கதி என்று செயல்பட்டால் அனைத்து செயலும் நடக்கும். வெற்றிவாகை சூடும் என்பது நாம் அறியும் பேருண்மையாகும்.

No comments:

Post a Comment